Aug 25, 2010

இந்த ஊரு நமக்கு வேண்டாங்க

"என்னங்க நமக்கு இந்த ஊரு வேண்டாம், வேற எங்கயாவது போய்டலாம்" வேலை முடித்து வீடு திரும்பிய கணேசனை வாசலிலேயே மறித்து சொன்னாள் அவன் மனைவி சாந்தி.

என்னடி? என்ன ஆச்சு திடீர்னு? இத்தனை வருசாம இல்லாம இப்போ ஏன் இந்த ஊரு வேண்டாங்கற? நெனச்சதும் எல்லாம் ஊரு மாறி போய்ட முடியாது...

எல்லாம் நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு தாங்க சொல்றேன். தயவு செஞ்சு இந்த ஊரை விட்டு போயிடலாம்ங்க.

என்ன ஆச்சுனு விவரமா சொல்லு அப்பறம் போலாமா வேணாமா முடிவு பண்ணலாம்.

அது வந்துங்க இது வரைக்கும் 2 - 4 மணி வரைக்கும் கரண்ட் இருக்காது. அந்த நேரத்துல TVல பாக்க ஒன்னும் இருக்காது அதனால பிரச்சனை இல்லாம இருந்தது ஆனா இப்போ 11 - 1 கரண்ட் போய்டுது. எல்லா மெகா சீரியல் அந்த நேரத்துல தான் போடறாங்க.

ஏண்டி நியாயமா இது? மெகா சீரியல் பாக்க முடியலன்னு ஊரு மாறனும்ங்க்றியே? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு?

அது இல்லைங்க, போன வாரம் புதுசா எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்களே கமலா அக்கா, அவங்க வீட்டுக்கு இன்னைக்கு போய் இருந்தேன். அந்த நேரம் பாத்து கரண்ட் கட் ஆயிடுச்சு. அவங்க சீரியல் பாக்க முடியலன்னு கன்னாபின்னான்னு சாபம் குடுக்க ஆரம்பிச்சிடாங்க கரண்ட் கட் பண்ணவங்களுக்கு. அதனால தான் சொன்னேன்...

கடமையை செஞ்சதுக்கு சாபமா? தர்மசங்கடமாய் விழித்தான் lineman கணேசன்...