Feb 19, 2009

இது காதல் காலமடி சகியே!!!


"விக்கி! விக்கி! எங்க போய் தொலைஞ்ச???" என்றபடி உள்ளே வந்தான் பிரித்வி.

பாஸ் வந்துட்டீங்களா, நான் இங்க தான் இருக்கேன், நீங்க தான் வழக்கம் போல காணாம போயிடீங்க. இப்போ எங்க போனீங்க? என்றான் விக்கி.

இன்னைக்கு எழுந்ததும் என்னவோ மாதிரி இருந்தது. அதான் சரினு 4 வருசத்துக்கு முன்னாடி நான் சமி கிட்ட ப்ரபோஸ் பண்ண நாளை போய் பாத்துட்டு இருந்தேன். உனக்கு தெரியுமா விக்கி? அன்னைக்கு என்ன நடந்ததுன்னா...

பாஸ்... நீங்க இத என் கிட்ட 1814 வது முறையா சொல்றீங்க, நீங்க காதலிக்க ஆரம்பிச்சு 1412 நாள் 12 மணி நேரம் 7 நிமிசம் ஆச்சு. ஒரு நாளைக்கு ஒரு முறைன்னா கூட கணக்கு இடிக்குதே. என்ன பண்ணலாம் பாஸ்?

உனக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு விக்கி... இது நல்லதுக்கில்ல... சொல்லிட்டேன்

பாஸ் என்னையா திட்டறீங்க ... இப்போ நீங்க திட்டு வாங்க போறீங்க... அத நான் பாக்க போறேன்.

என்னடா சொல்ற??? சமி கால் பண்ணாளா? வழக்கம் போல இன்னைக்கும் நான் பிக் பண்ணலியா? ஹையோ செத்தேன்...

சரியா கண்டுபிடிச்சிடீங்களே... எனக்கு என்னவோ இன்னைக்கு எக்ஸ்‌ட்ரா திட்டு விழும்னு தோணுது பாஸ். வழக்கத்த விட இன்னைக்கு 3 கால் அதிகமா பண்ணி இருக்காங்க.

போச்சு... விக்கி சிரிக்கிறத நிறுத்துடா. அவளுக்கு போன் போடு.

பாஸ் நீங்க என்ன திட்டிடீங்க அதனால நான் நீங்க சொல்றத கேக்க மாட்டேன் போங்க என்று நேரம் பார்த்து பழி வாங்கினான் விக்கி.

"அப்படியா சரி பாப்போம். நானே கால் பண்ணிக்கிறேன், நீ ஒண்ணும் பண்ண வேணாம் போடா" என சொல்லி சமி என்று செல்லமாய் அவன் அழைக்கும் சம்யுக்தாவிற்கு கால் செய்தான்.

எதிர்முனையில் தொலைபேசி உயிர் வலிக்க அலறிக் கொண்டிருந்தது. அருகிலேயே இருந்தும் சமி கண்டு கொள்ளவே இல்லை. அவ்வளவு சீக்கிரம் கோபம் கரைந்துவிடுமா என்ன??? சில பல அலறலுக்கு பிறகு சமி தொலைபேசியை எடுத்து "என்ன? இப்போ எதுக்கு கால் பண்ண? உனக்கு என்னை ஞாபகம் இருக்கா என்ன? என்னை தவிர மத்தது எல்லாம் தான் உனக்கு முக்கியம். இப்போ எனக்கு நெறைய வேலை இருக்கு, உன் கிட்ட பேசிட்டு இருக்க நேரம் இல்லை. ஏதாவது சொல்லணும்னா சீக்கிரம் சொல்லு, நான் போகணும்" என்றாள்.

பிரித்வி வழக்கம் போல சமாதான படுத்த முயன்றான். "நான் போன் எடுக்காதது தப்பு தான். ஆனா நான் என்ன பண்ணிட்டு இருந்தேன், எங்க போனேன்னு தெரியுமா? சொல்றேன் கேளு" என்று அவன் முடிக்கும் முன்பே சமி இடைமறித்து "தெரியும், அந்த ஓட்ட time machine ஏறி எனக்கு நீ ப்ரபோஸ் பண்ண நாளுக்கு போயிருப்ப. சரியா???" என்றாள். விக்கிக்கு மட்டும் அல்ல, சமிக்கும் இதை கேட்டு கேட்டு போர் அடித்து விட்டது.

எப்போதும் இது போல சண்டை வரும் போது, சாரி, ரெண்டு பேரும் போட்டால் தான் சண்டை, எப்போதும் அவள் கோபத்தில் திட்டும் போது இப்படி ஏதாவது சொல்லி தான் சமாதான படுத்துவான். இன்று அதுவும் பலனளிக்கவில்லை. அவள் கோபத்திற்கு வேறு ஏதோ பலமான காரணம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

ஹே இப்போ என்னடா ஆச்சு??? நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி திட்ற??? என்றான் பிரித்வி

நீயா??? நீ ஒண்ணுமே பண்ணல... அதனால தான் திட்டிக்கிட்டு இருக்கேன்...

அவளிடம் பேசும் போது பிரித்வி முகம் சென்ற கோணலில் இருந்தே விக்கி புரிந்து கொண்டான் அவனால் தனியாக இன்று அவளை சமாதான படுத்த முடியாது என்று. விக்கி அவனுக்கு உதவி செய்ய முடிவெடுத்தான். அவள் கோபத்திற்கு இன்று காரணம் எதுவாக இருக்கும் என ஆராய தொடங்கினான்.

நான் என்ன பண்ணல சொல்லு? உன் கூட செலவு பண்ண நேரம் இருக்காதுன்னு எனக்கு வந்த பதவி கூட வேணாம்னு சொல்லிட்டேன்.

கரெக்ட், வேணாம்னு சொன்ன ஆனா என் கூட நீ எங்க இருக்க??? அப்படியே கூட இருந்தாலும் அது மட்டுமே போதுமா??? லவ் பண்ண ஆரம்பிச்சு 4 வருசம் ஆகுது, நான் ஏன் கோவமா இருக்கேன்னு கூட உன்னால கண்டு பிடிக்க முடியல...

அவள் கோபத்திற்கு காரணம் எதுவாக இருக்கும் என்று அவன் யோசிக்க தொடங்கிய அதே நேரம், விக்கி விசிலடித்து கொண்டே வந்தான். பாஸ், அவங்க கோபத்திற்கு காரணம் என்னனு கண்டு பிடிச்சிட்டேன். இன்னைக்கு feb 29, அவங்க பிறந்த நாள், நீங்க மறந்துடீங்க என்று தன் வயிற்றில் இருக்கும் கணிப்பொறி திரையில் அடித்து காட்டினான் விக்கி.

அடடா... நாலு வருசத்துக்கு ஒரு முறை வரும் பிறந்த நாளை எப்படி மறந்தேன்??? அவ கோவம் நியாயம் தான் என்று நினைத்துக்கொண்டான். விக்கியின் தகர மண்டையில் தட்டி கொடுத்து "இதுக்கு தான் இப்படி ஒரு புத்திசாலி ரோபோவ கூடவே வெச்சுக்கணும்" என்று டைப் அடித்து காண்பித்தான். விக்கி கண்களில் இருந்த இரண்டு பல்பும் பிரகாசமாய் மின்ன, விசிலடித்து கொண்டே திரும்பி சென்றான்.

சமி, போன் வேலைக்கு ஆகாது பத்தே நிமிசத்துல நான் அங்க வரேன், நாம பேசலாம் சரியா? என்று சொல்லி அவள் பதில் சொல்லும் முன்பே போனை வைத்து விட்டான் பிரித்வி.

அடுத்த நொடி பரபரப்பாய் இங்கும் அங்கும் அவன் ஓட தொடங்கியதும் time machine தேடுகிறான் என புரிந்து கொண்டு அவன் கேட்கும் முன்னரே கொண்டு வந்து கொடுத்தான் விக்கி.

சூப்பர் விக்கி. சொல்லாமலே சரியா கண்டிபிடிச்சு கொண்டு வந்து குடுத்துட்ட... சரி இன்னொரு வேலை செய். 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கானு தேடி கண்டுபிடி அதுக்குள்ள வந்தடறேன் என்று சொல்லி கிளம்பினான் பிரித்வி.

அவன் தேவதை பூமிக்கு வந்த அந்த நாளை, அவள் முதல் முறையாய் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த அந்த கணத்தை அவன் canon கொண்டு உறைய வைக்க அவள் பிறந்த அந்த பொன் நாளுக்கு சென்றான். அவள் தாயின் கை அவள் மேல் பட்ட அந்த கணத்தை புகைப்படம் எடுத்தான் அவளுக்கு பிறந்த நாள் பரிசாய் தர. கிளம்ப எத்தனிக்கும் தருவாயில் அவள் ஒரு மந்திர புன்னகை பூக்க, அங்கிருந்து நகர மனமில்லாமல் அப்படியே நின்று போனான். இந்த சிரிப்பை இப்படியே விட கூடாது, எப்போதும் தன்னோடே இருக்க வேண்டும் என்று நினைத்து அவள் சிரிப்பதை புகைப்படமெடுத்து அங்கிருந்து திரும்பி வந்தான்.

அவன் வந்து சேர்ந்ததும் விக்கி ஆவலாய் கேட்டான் "எங்க போயிருந்தீங்க பாஸ்? என்ன வாங்கிட்டு வந்தீங்க?"

விக்கி அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல... 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ கண்டுபிடிச்சியா?

இல்ல பாஸ். 8 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கு, 10 வருசத்துக்கு ஒரு முறை பூக்குற பூ இருக்கு, 12 வருசத்துக்கு பூக்குற பூ கூட இருக்கு ஆனா 4 வருசத்துக்கு பூக்குற பூ இல்ல பாஸ் என்றான்.

அடடா இப்போ அவளுக்கு என்ன பொக்கே குடுப்பேன் என தலையில் கை வைத்து அவனுடன் கொண்டு வந்த அவள் குழந்தை புகைப்படத்தை சோகமாய் பார்த்தான்.

பாஸ், நீங்க 10 நிமிசத்துல வரேன்னு சொல்லி இருக்கீங்க. இப்போவே 8 நிமிஷம் ஆச்சு கெளம்புங்க இல்லாட்டி அண்ணி மறுபடியும் கோசிக்குவாங்க.

அவள் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் திடீரென பிரகாசமானது. விக்கி என்ன பண்றதுன்னு கண்டுபிடிச்சிட்டேன். இந்தா இது சமியோட சின்ன வயசு போட்டோ. எப்பவும் போல உன் கற்பனைய கொட்டி இத வெச்சு ஒரு பொக்கே பண்ணு பாப்போம், அப்படியே இது அவளோட அம்மா முதல் முறையா சமிய கைல எடுத்த நிமிசத்துல எடுத்த போட்டோ இதையும் சேத்து கொண்டு வா என்றான்.

பாஸ், இத நான் சத்தியமா எதிர் பார்க்கல. எனக்கு கொஞ்சம் டைம் ஆகுமே. ஒன்னு பண்ணலாம், நீங்க இப்போ போங்க, நான் இத பண்ணி கொண்டு வந்து தந்துடறேன் என்றான் விக்கி.

அதுவும் சரி தான். teleporter தயார் பண்ணிட்டியா??? 50 செகண்ட் தான் இருக்கு.

அண்ணி வீடு அட்ரஸ் கூட அடிச்சு வெச்சிட்டேன் பாஸ். நீங்க பட்டன் தட்டினா போதும் அடுத்த செகண்ட் போயிடலாம். நாம என்ன 2010 வது வருசத்துலையா இருக்கோம் 40 மைல் போக ஒரு மணி நேரம் ஆகுறதுக்கு? teleporter கைல கட்டிக்கிட்டு எங்க போகனுமோ அந்த அட்ரஸ் அடிச்சா உங்கள வலி இல்லாம செல் செல்லா பிரிச்சு அங்க கொண்டு போய் முளுசம் மறுபடியும் உருவம் ஆகிட போகுது. வாழ்கை சுலபமாகிடிச்சு பாஸ்.

அப்படியெல்லாம் இல்ல விக்கி இன்னமும் பொண்ணுங்கள எப்படி புரிஞ்சிக்கிரதுனு யாரும் கண்டு பிடிக்கல.உனக்கு இதெல்லாம் புரியாது. நேரம் ஆச்சு நான் கெளம்பறேன். பொக்கே பண்ணி உடனே கொண்டு வா என்று சொல்லி விட்டு பட்டனை தட்டினான்...

teleporter இயக்கிய நொடியில் அவன் அணு அணுவாக பிரிக்கப்பட்டு, அடுத்த நொடி சமி வீட்டிற்கு அணுக்கள் கடத்தப்பட்டு, அதற்கடுத்த நொடியில் அணுக்களாய் இருந்தவன் ஆணாக்கப்பட்டான். அவன் அங்கு சேர்ந்த நேரம், car என்ற ஒரு வாகனம் தான் மனிதர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் பயணத்திற்க்கு பயன்படுத்தி கொண்டு இருந்தார்கள் என்று history சேனல் சொல்லிகொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்தாள் சமி. தன் வருகையை பதிவு செய்ய முதல் வாக்கியத்தை சொன்னான் பிரித்வி.

நல்ல வேலை சமி, விஞ்ஞானம் வளர்ந்துடுச்சு இல்லாட்டி இந்த car ஏறி உன் வீட்டிற்கு வர வேண்டி இருந்திருக்கும். நான் வந்து சேரும் போது உனக்கு அடுத்த பிறந்த நாளே வந்திருக்கும். நல்ல வேலை தப்பிச்சேன்.

அட என் பிறந்தநாள் இவனுக்கு நினைவிருக்கிறது என ஒரு நிமிடம் சந்தோசப்பட்டாள். அடுத்த கணமே 12 மணியிலிருந்து அவன் அழைப்புக்கு காத்திருந்தது நினைவுக்கு வர, கோபம் தலைக்கேறியது.

மேடம் இன்னும் கூல் ஆகல போல இருக்கே... என்ன பண்ணா கூல் ஆவீங்க?

இதையும் என்னையே கேளு... சொந்தமா மூளையே கிடையாதா? எப்போ தான் உனக்கெல்லாம் பொறுப்பு வருமோ? உன்ன போய் லவ் பண்ணி தொலைச்சேனே... என் கெட்ட நேரம். லவ் பண்றப்பவே இப்படி இருக்க இன்னும் கல்யாணம் ஆனதுக்கப்பறம் எப்படி இருப்பியோ.

உனக்காக ராத்திரி முழுக்க மூளைய கசக்கி ஒரு gift கண்டுபிடிச்சு கொண்டு வந்தா, நீ ஒரு நிமிஷம் கூட பேச விடாம திட்டிகிட்டே இருக்க என்று பொய் சோகத்தை முகத்தில் காட்டி சொன்னான்.

அவன் சோக பாவனைக்கு சற்றும் மயங்காமல் சமி சொன்னாள் "நீ மூளைய போட்டு கசக்கினியா? சரி என்ன கொண்டு வந்திருக்க காட்டு பாப்போம். எனக்கு மட்டும் பிடிக்கல நீ செத்த என்றாள்.

சே, நம்ம expression கொஞ்சம் கூட வேலைக்கு ஆக மாட்டேங்குதே. இதே மாதிரி அவ பண்ணா மட்டும் நான் ஏமாந்துடறேன். ஒரு வேலை இன்னும் கொஞ்சம் practice வேணும் போல என்று நினைத்து கொண்டான்.

அதே நேரம் விக்கி கிளம்பிவிட்டதாக அவனுக்கு தகவல் அனுப்பியதை அவன் கை கடிகாரத்தில் இருந்த குட்டி கணிப்பொறியில் பார்த்து விட்டான்.

நிச்சயமா உனக்கு இந்த மாதிரி ஒரு பிறந்த நாள் பரிசு யாரும் தந்திருக்க மாட்டாங்க. இதோ உன் பரிசு என்று அவன் கைகளை நீட்ட, சரியாய் அந்த நேரத்தில் வண்ணமயமாய் அலங்கரிக்க பட்ட ஒரு பெட்டியை அவன் கையில் வைத்தான் விக்கி.

நல்ல வேலை விக்கி சொதப்பாம காப்பாத்திட்டான் என்று மனதுக்குள் பாராட்டிவிட்டு சமி முகத்தை பார்த்தான். விக்கி அவன் மன ஓட்டத்தை படித்து விட்டு சந்தோஷமாய் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

சமி அதை கண்கள் விரிய பார்த்தாள். அவனுக்குள் ஒரு படபடப்பு வந்தது அவளுக்கு பிடிக்க வேண்டுமே என்று. அவள் ஆவலாய் அந்த பெட்டியை திறக்க அதில் ஒரு சிறிய பந்து இருந்தது. அவள் அதை கையில் எடுத்த அடுத்த நொடி, அதிலிருந்து ஒழி பாய்ந்து அவளுக்கு எதிரில் குட்டி சமியை அவள் தாய் கையில் வைத்திருப்பது போல ஒரு முப்பரிமாண பிம்பம் உருவானது. அவள் சந்தோசத்தில் குதித்தே விட்டாள்.

இது எப்படி என்பது போல பிரித்வியை பார்க்க, அவள் பார்வையை புரிந்து கொண்டு சொன்னான் "இதுக்கு பேரு 3D hologram. ஒரு போட்டோ வெச்சு அதே மாதிரி ஒரு உருவத்தை உருவாக்க முடியும். உன்னை முதல் முறையா உங்க அம்மா தூக்கினப்ப எடுத்த போட்டோ வெச்சு உருவாக்கினது இது"

அவன் மீது இருந்த கோபம் எப்போது எப்படி காற்றாய் பரந்தது என்று அவளுக்கு தெரியவில்லை. அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். பல முறை அவன் கேட்டும் கிடைக்காத முத்தம் இன்று விக்கியின் தயவால் கிடைத்தே விட்டது அவனுக்கு.

அந்த நிமிடம் teleporter இல்லாமலே சொர்கத்திற்கு சென்று வந்தான் அவன். சமி அந்த பெட்டியில் வேறு எதுவோ இருப்பதை பார்த்து உள்ளே இருந்து எடுத்தாள். அவள் புகைப்படத்தை வைத்து வண்ணமயமாய் உருவாக்கிய பொக்கே அது.

என்னடா இது என் போடோவ வெச்சி பொக்கே பண்ணி இருக்க? நீ என்ன லூசா?

அது ஒன்னும் இல்ல, 4 வருசத்துக்கு ஒரு முறை பூக்கிற பூ வெச்சு ஒரு பொக்கே பண்ணலாம்னு பாத்தா, உன்ன தவிர வேற ஒரு பூ கூட நாலு வருசத்துக்கு ஒரு முறை பூக்கிறது இல்ல... அதான் உன் போடோவ வெச்சே ஒரு பொக்கே பண்ணிட்டேன்.

சாரி டா. உன்னை ரொம்ப திட்டிடேனா? இந்த மாதிரி ஒரு gift நீ தருவேன்னு சத்தியமா நான் எதிர் பார்க்கவே இல்ல. I love you sooooooooo much.

அவ்வளோ தானா? ஒரு போனஸ் முத்தம் எல்லாம் கிடையாதா??? ப்ளீஸ், ப்ளீஸ் என அவன் கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்த வேளையில் இரண்டு பிறந்தநாளுக்கு முன்பு பார்க்க வந்த சமியின் தந்தை மீண்டும் வந்தார். அவர் வந்ததை கவனிக்காமல் அவனை சமி முத்தமிட உறைந்து போனது அவன் மட்டும் அல்ல சாமியின் தந்தையும் தான்.

சம்யுக்தா என்ன நடக்குது இங்க? என்று அவர் கத்திய போது தான் அவர் வருகையை இருவரும் உணர்ந்தார்கள்...

பகுதி - 2

Feb 1, 2009

அவள், அவன், நீங்கள் மற்றும் நான் - பகுதி 3

அவனை உறைய வைத்த அவளின் காதலை சொல்ல வேண்டுமானால் கால சக்கரத்தை சிறிது பின்னோக்கி செலுத்த வேண்டி இருக்கும். பின்னோக்கி என்றதும் மனகண்ணில் ஒரு கொசுவத்தி சுருள் சுற்றுவதை போல் தோன்றினால், எச்சரிக்கை - இது ராதிகாவின் நெடுந்தொடர் அல்ல தொடர் கதை தான். கால சக்கரம் கூட ரெக்கை கட்டி கொண்டு தான் பறக்கிறது இன்றைய இயந்திர உலகத்தில். நீங்கள் ஒரு முறை இமைத்து முடிப்பதற்குள் இதோ உங்கள் கண் முன்னே அந்த நாள் வந்துவிட்டதே...

அவளை அவன் பேருந்தில் பார்த்த நாளில் அவளை பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தான். கடல் தாண்டி இருக்கும் காதலியை ராமன் காலத்திலேயே கண்டுபிடிக்க முடிந்த போது இன்றைய கணிப்பொறி யுகத்தில் அதுவும் ஒரே நிறுவனத்தில் இருப்பவளை கண்டுபிடிக்க முடியாதா என்ன? அவள் அணிந்திருந்த அடையாள அட்டையை கொண்டு அவள் புதிதாய் சேர்ந்தவள் என்பதை உறுதி படுத்தி கொண்டான். புது முகங்களுக்கு பயிற்சி நடப்பது வேறு ஒரு அலுவலகத்தில். கண்ணின் கடைக்கண் பார்வையை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணின் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம், எங்கோ கேட்டது. வேறு அலுவலகம் என்பது ஒரு தடையாகவே இருக்கவில்லை அவனுக்கு. பொதுவாய், வேலை இல்லாதவர்களோ அல்லது வேலை நன்கு தெரிந்தவர்களோ தான் பயிற்சி தருவது வழக்கம். அவன் அணியிலும் அப்படி ஒருவன் இருந்தான். வேலையே இல்லாத அந்த வெட்டிக்கு பதிலாய் மறுநாள் புதியவர்களுக்கு கற்பிக்க களமிறங்கினான் நம் கதாநாயகன்.

அவன் பயிற்சி தர சென்ற அந்த குழுவில் அவள் இல்லை, அவள் வேறு பிரிவாம். கடினப்படாமல் கிடைக்கும் எதற்கும் மரியாதை இருப்பதில்லை. அதனால் தானோ என்னவோ அவளை பற்றி அவனால் சுலபமாய் தெரிந்துக்கொள்ள முடியவில்லை. அவன் கற்று தந்த விதத்தாலோ அல்லது அவனுடைய இயல்பான பேச்சாலோ அல்லது கணிப்பொறியை பற்றிய அவனுடைய ஆழ்ந்த அறிவாலோ அத்தனை பேரும் அவன் பால் ஈர்க்கபட்டார்கள். காலை நேர பயிற்சி முடிந்து உணவருந்த சென்றான். அவனோடு அந்த குழுவிலிருந்த சிலரும் உடன் சென்றார்கள். ஒரு வாசல் மூடினால் அடுத்த வாசல் திறக்குமாமே அவனுக்கும் அப்படியொரு வாசல் திறந்தது அங்கு தான். உணவு வாங்க வரிசையில் நின்றிருந்த போது அது நிகழ்ந்தது.
அவனுக்கு பின்னால் நின்றிருந்தவன் யாரிடமோ உனக்கு எப்படி செல்கிறது பயிற்சி என்று கேட்டுக்கொண்டிருந்தான். யாரிடம் கேட்கிறான் என்று திரும்பியவனுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்றே போனது. யாரை தேடி வந்தானோ அவளிடம் தான் கேட்டுக்கொண்டிருந்தான்.அவர்கள் பேசுவதிலிருந்து இருவரும் நண்பர்கள் என புரிந்துகொண்டான். அவன் துருப்புச்சீட்டு கிடைத்துவிட்டது. இனி அவளை பற்றி எப்படி தெரிந்து கொண்டிருப்பான் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டி எழுப்பி ஓட விடுங்கள் சுலபமாய் புரிந்திடும்.

அவள் காதலை பற்றி சொல்கிறேன் என்று கூறிவிட்டு இதுவரை அதை பற்றி எதுவும் பேசவில்லையே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இதோ அவள் காதல் இனி...

உணவு வரிசையில் நின்றிருந்த போது அவளிடம் பயிற்சி எப்படி செல்கிறது என்று கேட்டான் அவள் தோழன். ஏன் இன்று வந்தோம் என ஆகிவிட்டது அப்படி ஒரு கடி என நொந்து கொண்டாள். எங்களுக்கு அப்படியே தலைகீழ், இதுவரை இப்படி ஒரு பயிற்சி நடந்ததில்லை, இதோ இவர் தான் எங்களுக்கு பயிற்சி தருகிறார் என்று கதாநாயகனை காட்டினான் அந்த காதல் தூதுவன். சரியாய் அதே நேரம் அவளை திரும்பி பார்த்து உறைந்து போயிருந்தான் நம் தலைவன். அவள் அவனை முதல் முறையாய் பார்த்தாள். இந்த முறை அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ஆனால் அண்ணல் மட்டும் அதை உணரவேயில்லை.

முதல் முறையாய் அவளுக்குள் ஏதோ ரசாயன மற்றம் நிகழ்வது போல தோன்றியது அவளுக்கு. இதயம் இரண்டு மடங்காய் துடித்தது, நின்று போன அவன் இதயத்திற்கும் சேர்த்து. அதுவரை அவள் காதலை சந்திக்காததால் அந்த ரசாயன மாற்றத்தை என்னவென உணர சில நாட்கள் ஆனது. பின் வந்த நாட்களில் அவனை பற்றி அவள் தோழன் பேசியதெல்லாம் அந்த ரசாயன மாற்றத்திற்கு ஒரு வினையூக்கியாய் இருந்தது. மீண்டும் ஒரு முறை அவனை பார்ப்போமா என தினம் சிந்திக்க தொடங்கினாள். அட என்ன இது, யார் என்றே தெரியாதவனை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேனே, இனி அவனை பற்றி நினைக்க போவதில்லை என முடிவு எடுப்பாள். பதினைந்து நிமிடத்தில் எடுத்த முடிவு மறந்து அவன் நினைவு தோன்றும். அவளை பார்த்துவிட்டு விக்ரமாதித்தனிடம் வேதாளம் சொன்னதாம், உன்னை விட அதிகமாய் முயற்சி செய்து தோற்றவள் இவளாக தான் இருக்க முடியுமென்று.

அவனை கண்ட நாளோடு அவள் காலம் உறைந்துவிட்டது ஆனால் அந்த நிமிடத்திலிருந்து காலம் கால் கடுக்க வேகமாய் ஓடி கொண்டு இருந்தது. அவர்கள் சேரும் வரை வேகமாய் ஓட காதலிடமிருந்து காலத்திற்கு கட்டளை. இறைவனை கூட பகைக்கலாம் காதலை பகைத்து காலத்தால் காலம் தள்ளி விட முடியுமா என்ன? காலம் ஓடிய ஓட்டத்தில் அவள் பயிற்சி நிறைவுக்கு வந்தது. அன்றிலிருந்து அவன் இருக்கும் அலுவலகத்திற்கு அவள் செல்ல வேண்டும். எப்படியேனும் அவனை தேடி பிடித்திட வேண்டும் என நினைத்து கொண்டிருந்தாள். எல்லோருக்கும் அணி பிரித்து தரப்பட்டது. அவள் அவளுடைய அணிக்கு சென்றதும் முதலில் கண்ணில் பட்டது அவனே, அதன் பிறகு எதுவும் அவள் கண்ணிற்கு படவே இல்லை. தன்னிலை உணர்ந்து இயல்பாகும் முன்னே அவன் வந்து வரவேற்று விட்டும் சென்று விட்டான். ஒரு வேளை அவனுக்கும் தன்னை பிடித்திருக்குமோ என நினைத்தாள். அந்த நினைப்பே மிக பெரிய ஆனந்தத்தை தந்தது. அது எப்படி இது வரை அவன் என்னுடன் பேசியது கூட இல்லை, எப்படி என்னை பிடிக்கும் என மறுகணம் நினைத்தாள். நான் கூடத்தான் அவனிடம் பேசியதில்லை இருந்தும் எனக்கு பிடித்திருக்கிறதே அது போல தான் என சமாதான படுத்திக் கொண்டாள். அவனுக்கு இப்போது என்னை பிடிக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் இனி பிடித்து விடும், பிடிக்க வேண்டும் அது தான் அவன் விதி என உறுதியாய் நம்பினாள்.நாளை முதல் அவன் விதியை அவனுக்கு உணர வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அடுத்த நாள் பிறந்தது, அவனுக்கு முன்பே பேருந்து நிலையத்திற்கு சென்றாள். அவனை பார்த்தும் நட்பாய் ஒரு புன்னகை பூத்தாள். பேருந்து வந்தது, அவளுக்கு பின்னால் சென்று அமர்ந்து கொண்டான் அவன். பயணம் தொடங்கியது, எப்படி அவனுடன் பழக தொடங்குவது என யோசித்தாள். பேருந்து அலுவலகம் அடைந்தும் அவளால் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை, பாவம் தமிழ் திரைப்படம் அதிகம் பார்க்காத வகுப்பறை முதல் வரிசை மாணவி அவள். மெலிதாய் ஒரு சோகம் அவளுக்குள் நுழைந்தது. காலை 5 மணிக்கு எழ வேண்டும் என்பதிலிருந்து தேர்வில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் எனும் வரை அத்தனைக்கும் அவள் நம்பிய குல தெய்வம் தான் இப்போதும் மாட்டி கொண்டது. அவனுக்கு தன்னை பிடிக்க வேண்டும், அப்படி செய்தால் ஊருக்கு வந்து பார்ப்பேன் இல்லாவிட்டால் அவ்வளவு தான் என மிரட்டினாள். தெய்வமாய் இருப்பது கூட கடினம் தான் போல.

அவள் வாட்டமாய் இருப்பதை கண்டு அவன் செய்தவை எல்லாம் உங்களுக்கு முன்பே கூறி இருக்கிறேன். அவன் ஏன் தனக்கு இத்தனை உதவி செய்கிறான்? ஒரு வேளை அவனுக்கும் என்னை பிடித்து விட்டதோ என நினைத்தாள். உதவி செய்பவர்கள் எல்லாம் காதலிக்கிறார்கள் என்றால் அந்த அணியில் பாதி பேர் அவளை காதலிக்கிறார்கள். பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், அவர்களை ஆண்களுக்கும் பிடிக்கிறது, பெண்களுக்கும் பிடிக்கிறது. ஆண்குலம் தான் பாவம், அவன் சேர்ந்த போது என்ன என்று கேட்க கூட நாதி இல்லை. ஆனால் உதவி செய்பவர்கள் அத்தனை பேரும் தினம் தன்னை பார்ப்பதும், அவள் பார்த்தால் அசடு வழிவதுமாய் இருப்பதில்லையே, அவன் மட்டுமே அப்படி இருக்கிறான். ஆக அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என முடிவு செய்தாள். குல தெய்வம் வேலை பார்த்துவிட்டது, இனி நான் போய் பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

அவள் நேர்த்திக் கடன் தீர்க்க நாளும் வந்தது. அவளுக்கு வேலை கிடைத்தால் குல தெய்வத்தின் கோவிலுக்கு குடும்பத்துடன் வருவதாய் அவள் தாய் வேண்டிக் கொண்டதாகவும் அதனால் அடுத்த வாரம் விடுப்பு எடுத்து வருமாறு அவள் தாய் கூற, அட எல்லாம் நினைத்த படியே நடக்கிறதே என ஆனந்தமாய் அவள் ஊருக்கு புறப்பட்டாள். குல தெய்வத்தின் கோவில் - அவளுக்கு வேலை கிடைத்ததற்கு அவள் தாய் நன்றி கூறி படையல் இட்டு கொண்டிருந்தாள். இறைவனோ அடுத்து அவள் என்ன கேட்க போகிறாளோ என பதறிக்கொண்டு இருந்தான். அவனுக்கு தன்னை பிடித்துவிட்டது என அவள் நம்பியதால் கிடைத்த மன நிறைவில் அவள் ஏதும் கேட்காமல் வந்து விட்டாள். இறைவன் அங்கு விசிலடித்து கொண்டாடி கொண்டு இருந்தான். முதல் நாள் மட்டுமே ஆனந்தமாய் கழிந்தது. அடுத்த நாளில் இருந்து அவன் நினைவு மேலோங்கி அவனை காண முடியவில்லையே என சோர்ந்து போனாள்.அவள் குடும்பத்தை பிரிந்து முதல் முறையாய் சென்னைக்கு படிக்க சென்ற போது அவள் அடைந்த வேதனையை அந்த வாரத்தில் மீண்டும் உணர்ந்தாள். அவள் ஊருக்கு போன ஒரு வாரத்தில் அவன் என்ன ஆனான் என்பது உங்களுக்கு தான் தெரியுமே...

அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என ஆணித்தரமாய் அவளை நம்ப வைத்தது அவள் பிறந்த நாளில் அவன் செய்த செயல்கள். அவள் அலுவலகம் நுழைந்தவுடனே அவளை வாழ்த்த சென்றான் அவன். அவன் செல்வதற்குள் அணி தோழன் ஒருவன் சென்று அவளை வாழ்த்தி தேவதையை போல இருக்கிறாய் என்று சொல்லி வந்தான். அப்போது அவன் கண்களில் தெரிந்த பொறாமை அவளுக்கு அவன் நேசத்தை காட்டியது. அவள் பிறந்த நாளுக்கு அவனும் புத்தாடை அணிந்து வந்திருந்தது அவளை மேலும் நம்பவைத்தது. இன்று எப்படியும் தன்னை பிடித்திருக்கிறது என சொல்லி விடுவான் என்று நம்பியிருந்தவளுக்கு அவன் வாழ்த்து மட்டும் சொல்லி சென்றது பெரும் ஏமாற்றத்தை தந்தது. நாட்கள் ஓடியது. இருவரும் பரிமாறிக்கொள்ளும் புன்னகையை தவிர எந்த முன்னேற்றமும் நிகழ்ந்திடவில்லை. அவனாக வந்து காதல் சொல்வான் என்ற நம்பிக்கை குறைய தொடங்கியது. இனி காத்திருந்து நாட்களை வீணடிக்க வேண்டாம், நானே அவனிடம் நல்லதொரு நாளில் காதலை சொல்ல வேண்டியது தான் என முடிவு செய்தாள்.

அவன் விருது வாங்கிய அந்த நல்லதொரு நாளில் அவள் காதல் சொல்லி அவனை உறைய வைத்தது வரை உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நடந்தது தெரிய வேண்டுமா? சொல்கிறேன் கேளுங்கள். அவள் காதல் சொன்ன கணத்தில் உறைந்தவன், உன்னோடு நான் பேச வேண்டும் என்ற அவளுடைய அடுத்த வார்த்தையில் தன்னிலை அடைந்தான். மந்திரத்தால் கட்டுண்டவனை போல அவள் பின்னால் நடந்து சென்றான், இனி வாழ்கை முழுக்க அப்படி தானே. அவர்கள் தேநீர் வாங்கி கொண்டு அலுவலகமா அல்லது காதலர் பூங்காவா என புதிதாய் வருபவர்கள் சந்தேகிக்கும் அந்த சின்ன பூந்தோட்டத்திற்கு வந்தார்கள். அவள் பேச துவங்கினாள், அவனை சந்தித்த நாள் முதல் அன்று வரை நடந்த அத்தனையும் சொன்னாள். அவளுக்கும் கண்டதும் காதலா? அவனால் நம்பவே முடியவில்லை. அவனும் அவளை காதலிப்பதாய் கூறி, அவளை சந்தித்ததையும் காதல் வயபட்டதையும் சொன்னான். அவளை காதலிக்க வேண்டும் என்பது அவனுடைய விதி மட்டுமல்ல அவளுடையதும் தான் என்று புரிந்தது அவளுக்கு. அவளும் அவனும் அவர்கள் ஆனார்கள். அப்பாடா, அவர்கள்
இணைந்து விட்டார்கள், காதல் இட்ட கட்டளை முடிந்தது, இனி எப்போதும் போல் இயல்பாய் ஓடலாம் என பெருமூச்சு விட்டது காலம். இறைவனோ அவர்கள் திருமணம் இனிதாய் நடக்க வேண்டும் என காதல் இட்ட கட்டளைக்கு பயந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான் பாவம்.

எல்லாம் சரி, அவனும் அவளும் இப்போது எங்களுக்கு பரிச்சயம் ஆனால் நீ யார் என நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்(கேட்காவிட்டாலும் சொல்வேன்!) நானும் உங்களில் ஒருவன் தான், ஒரு சிறிய வித்தியாசம், நம்மோடு இருக்கும் எத்தனையோ அவனையும் அவளையும் கவனிக்கும் ஒருவன் நான். என் கண்ணில் பட்ட சில அவனையும் அவளையும் உங்களுக்கு பரிச்சய படுத்த என் முயற்சி இது. தொடர்ந்து முயற்சிப்பேன், காத்திருங்கள். :-)

பகுதி - 1

பகுதி - 2