Aug 25, 2010

இந்த ஊரு நமக்கு வேண்டாங்க

"என்னங்க நமக்கு இந்த ஊரு வேண்டாம், வேற எங்கயாவது போய்டலாம்" வேலை முடித்து வீடு திரும்பிய கணேசனை வாசலிலேயே மறித்து சொன்னாள் அவன் மனைவி சாந்தி.

என்னடி? என்ன ஆச்சு திடீர்னு? இத்தனை வருசாம இல்லாம இப்போ ஏன் இந்த ஊரு வேண்டாங்கற? நெனச்சதும் எல்லாம் ஊரு மாறி போய்ட முடியாது...

எல்லாம் நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு தாங்க சொல்றேன். தயவு செஞ்சு இந்த ஊரை விட்டு போயிடலாம்ங்க.

என்ன ஆச்சுனு விவரமா சொல்லு அப்பறம் போலாமா வேணாமா முடிவு பண்ணலாம்.

அது வந்துங்க இது வரைக்கும் 2 - 4 மணி வரைக்கும் கரண்ட் இருக்காது. அந்த நேரத்துல TVல பாக்க ஒன்னும் இருக்காது அதனால பிரச்சனை இல்லாம இருந்தது ஆனா இப்போ 11 - 1 கரண்ட் போய்டுது. எல்லா மெகா சீரியல் அந்த நேரத்துல தான் போடறாங்க.

ஏண்டி நியாயமா இது? மெகா சீரியல் பாக்க முடியலன்னு ஊரு மாறனும்ங்க்றியே? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு?

அது இல்லைங்க, போன வாரம் புதுசா எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்களே கமலா அக்கா, அவங்க வீட்டுக்கு இன்னைக்கு போய் இருந்தேன். அந்த நேரம் பாத்து கரண்ட் கட் ஆயிடுச்சு. அவங்க சீரியல் பாக்க முடியலன்னு கன்னாபின்னான்னு சாபம் குடுக்க ஆரம்பிச்சிடாங்க கரண்ட் கட் பண்ணவங்களுக்கு. அதனால தான் சொன்னேன்...

கடமையை செஞ்சதுக்கு சாபமா? தர்மசங்கடமாய் விழித்தான் lineman கணேசன்...

Oct 23, 2009

அறியா புள்ள தெரியா தனமா கேட்டுட்டான்...

கேள்வி கேளுங்கள் ஞானம் பிறக்கும்... யாருக்கு??? யாருக்கோ... நான் கேள்வி கேட்டப்ப எல்லாம் அடி உதை கிடைக்காம தப்பிக்கிறதே பெரிய விசயமா இருக்கு... இதுல ஞானம் பொறந்துச்சா இல்லையான்னு பாக்க நேரம் இல்லாம போச்சு... அப்படி என்ன பெருசா கேள்வி கேட்டேன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க... சின்ன சின்ன கேள்வி தான் கேட்டேன்... நீங்களே வேணும்னா பாருங்களேன்...

அப்போ நான் ஆறாம் கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன், சாரி போயிட்டு இருந்தேன் ... நாங்க எல்லாம் பாரதியார் ஜாதி... சுட்டு போட்டாலும் கணக்கும் வராது, கணக்கு பண்ணவும் வராது(இப்பவும்). கணக்கு வாத்தி வந்து ஏதேதோ சொல்லிட்டு இருந்தாரு... சுத்தமா ஒன்னும் புரியல. நான் முழிக்கிறத பாத்து எனக்கு ஞானம் பொறக்கும்னு நெனச்சு சும்மா இருக்காம என்ன ஒரு கேள்வி கேட்டாரு. அவர் கேட்ட கேள்வி இது தாங்க "ஒரு 10 அடி உயரம், 4 அடி அகலம் இருக்குற தொட்டில நிமிசத்துக்கு ஒரு லிட்டர் வேகத்துல தண்ணி விழுது. அப்போ தொட்டி நெறைய எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு?"

நான் தெரியாதுன்னு சொல்லி தலைய கொஞ்சம் குனிஞ்சிருந்தா ரெண்டு அடியோட அப்போவே கதை முடிஞ்சு இருக்கும், நீங்களும் இப்போ இத படிச்சு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம். ஆனா உங்க கெட்ட நேரமோ, இல்ல அந்த வாத்தி கெட்ட நேரமோ இல்ல என் கெட்ட நேரமோ தெரியல, எனக்கு புத்திசாலி தனமா ஒரு கேள்வி தோனுச்சு. அது என்னனா "இத தெரிஞ்சிகிட்டு நான் என்ன சார் பண்ண போறேன்?". அப்போ கூட அவர் கடுப்பாகி நாலு சாத்து சாத்தி இருக்கலாம், அத விட்டுட்டு, நல்ல மனுஷன், எனக்கு புரிய வெச்சே தீருவேன்னு பதில் சொன்னாரு. "தம்பி, நாளைக்கு உங்க அம்மா உன்ன தொட்டில தண்ணி நிரப்ப சொல்றாங்க, அப்போ இந்த கணக்கு தெரிஞ்சா தண்ணி ரொம்ப எவ்வளவு நேரம் ஆகும்னு கண்டுபிடிச்சு, சரியா தொட்டி ரொம்பும் போது போய் நிறுத்திடலாம் இல்ல?"

சனி சிம்மாசனம் போட்டு கால் ஆட்டிட்டு என் நாக்குல ஒக்காந்துட்டு இருக்கும் போது நான் எப்படி சும்மா இருக்க முடியும்? அவர் கேள்விக்கு என்னோட பதில் இது தான்... "சார், எங்க வீடு தொட்டி ஒயரம், நீளம், தண்ணி வர்ற வேகம் எல்லாத்தையும் கணக்கு எடுத்து அதுக்கப்பறம் தொட்டி ரொம்ப எவ்வளவு நேரம் ஆகும்னு கண்டுப்பிடிக்கிறதுக்கு பதிலா, தண்ணிய தெறந்து விட்டுட்டு வெளையாட போறதுக்கும், 'உனக்கு எவ்வளோ சொன்னாலும் பொறுப்பே வராது, தண்ணி ரொம்பி கீழ போகுது போய் நிறுத்திட்டு வாடான்னு' அம்மா திட்டுறதுக்கும் நடுவுல இருக்குற நேரம் தொட்டி ரொம்ப ஆகுற நேரம் அப்படின்னு கணக்கு பண்றது சுலபமாச்சே சார். நீங்க என்ன சொல்றீங்க?"

அவர் என்ன சொன்னாருன்னு சத்தியமா எனக்கு இப்போ வரைக்கும் தெரியாதுங்க. ஆனா ஏதோ திட்டி இருப்பாருன்னு நெனைக்கிறேன். எப்படி அது மட்டும் சரியா தெரியும்னா, சினிமாவுல எல்லாம் வில்லன் திட்டும் போது "ங்கோய்" அப்படின்னு ஒரு சத்தம் வருமே அதே சத்தம் தான் அப்பவும் வந்துச்சு, ஆனா கூடவே ஒரு கை அச்சும் கன்னத்துல பதிஞ்சு இருந்தது...

சரி ஸ்கூல்ல கேள்வி கேட்டா தான் அடி விழுதுனு வேற எடத்துல கேட்டா அங்கயும் அதே பதில் தான்... என்னோட நியாயமான கேள்வி சிலது சொல்றேன், நீங்களே முடிவ சொல்லுங்க...

கேள்வி 1: ஒரு நாள் news பாத்துட்டு இருந்தப்ப செய்தி வாசிக்கிற அந்த அழகான பொண்ணு சொல்லிச்சு "இங்கிலாந்து பிரதமரும் அமெரிக்க அதிபரும் ரகசிய சந்திப்பு". பக்கத்துல news "பாத்துட்டு" இருந்த நண்பர் கிட்ட கேட்டேன் "ஏன் பாஸு, ரெண்டும் பேருக்கு மட்டும் தெரிஞ்சா தானே அது ரகசிய சந்திப்பு? இப்போ தான் ஊருக்கே தெரிஞ்சிடுச்சே அப்போ அது சாதா சந்திப்பு தானே?" அவர் அங்க இருந்து ஓடறதுக்கு முன்னாடி சொன்ன பதில் "உன் கூட ஒக்காந்து news 'பாத்தேன்' பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்".

கேள்வி 2: இன்னொரு நாள் சாப்பிட ஒரு ஹோட்டல் போனோம் நானும் என்னோட நண்பனும். அங்க 'buffet' அப்படின்னு எழுதி இருந்தாங்க. நான் கேட்டேன் "மச்சி பப்பே அப்படின்னு தானே சொல்றோம் எதுக்கு இந்த 't' கடசில தேவை இல்லாம போடறாங்க? அத எழுதறத விட்டுட்டு மிச்சமாகுற காசுல ஒரு பீடா எக்ஸ்ட்ராவா வெக்கலாம்லே?". இத நான் கேட்டு முடியும் போது அவன் பாக்க முடியாத தூரத்துக்கு ஓடிட்டான்...

கேள்வி 3: தமிழ், ஹிந்தி, தெலுகு படம் எல்லாம் பாத்து ரொம்ப போர் அடிச்சிடுச்சி பக்கத்துல ஒரு CD கடைல எல்லா அனிமேஷன் படமும் இருக்கு போய் வாங்கிட்டு வரலாம்னு இன்னொருத்தன் கூப்பிட்டான். அங்க போனா ஒரு CD 250 ரூபாய். அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல் அப்படின்னு கேட்டதுக்கு அங்க இருந்தவரு சொன்னாரு "இதுல நெறைய ஸ்பெஷல் feature இருக்கு. Deleted scenes கூட தனியா குடுத்து இருகாங்க". நான் கேட்டேன் "ஏன் சார், படத்துல இருக்க லாயக்கி இல்லேன்னு தானே அத delete பண்ணாங்க, அப்பறம் எப்படி அது special feature?" அதுக்கப்பறம் அந்த கடை பக்கம் கூட வர விட மாட்டேனுட்டாங்க...

கேள்வி 4: நல்லா பசிச்சதும் தான் சாப்பிடனும், அப்போ தான் ஒடம்புக்கு நல்லது - அம்மா ஒரு நாள் சொன்னாங்க. கண்ட நேரத்துல சாப்பிடாதடா, ஒடம்புக்கு நல்லது இல்ல - இதுவும் அம்மா தான் சொன்னாங்க. என் கேள்வி என்னனா 'கண்ட நேரத்துல பசிக்கும் போது சாப்பிட்டா ஒடம்புக்கு நல்லதா? கெட்டதா?'

நீங்களே சொல்லுங்க இந்த அறியா புள்ள தெரியா தனமா கேட்டதுல ஏதும் தப்பு இருக்கா? இத சொன்னா திட்டுறாங்க, முறைக்கறாங்க, தலை தெறிக்க ஓடறாங்க. உங்களுக்கும் இந்த மாதிரி ஞானம் வளக்குற கேள்வி இருந்தா கேளுங்க, நம்ம எல்லாம் சேந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்...

Apr 15, 2009

இது காதல் காலமடி சகியே!!! - பகுதி 3

பகுதி - 1
பகுதி - 2

பாஸ் இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே யோசிச்சிகிட்டு இருப்பீங்க? எப்போ தான் களத்துல இறங்க போறீங்க?

என்ன பண்றது விக்கி? சும்மா நெனச்சதும் உடனே செய்ற அளவுக்கு சின்ன வேலையா இது?

சின்ன விஷயம் இல்ல தான் இருந்தாலும் நீங்க ரொம்ப லேட். என் பாஸ் அப்படின்னு வெளிய யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.

விக்கி உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல?

அப்பாடி கொஞ்சம் தான் ஓவரா? நான் கூட ரொம்ப ஓவரோனு நெனச்சேன்.

நேரம்டா, உன் பேச்ச எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் தானே, பேசிக்கோ. என் பிளான் படி சீக்கிரமே சமி வந்துடுவா அதுக்கப்பறம் இப்படி பேசினா அடி தான் வாங்குவ அவ கிட்ட.

போங்க பாஸ். அண்ணி வந்ததும் உங்க சைடு இன்னும் வீக் ஆயிடும். அவங்க என் கட்சி.

அதுவும் சரி தான். அவ எப்பவும் எனக்கு எதிர் கட்சி தான்.

என்ன பிளான் பாஸ் பண்ணி இருக்கீங்க? எப்பவும் போல வேலைக்கு ஆகாத பிளான் தானே?

நீ ரொம்ப பேசற. உன் கிட்ட நான் அத சொல்றதா இல்ல.

நல்லா யோசிங்க பாஸ். என் உதவி இல்லாம நீங்க தனியா செய்ய முடியுமா?

டேய், எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்துலேயே குதிரையில போய் தூக்கிட்டு வந்தவன் பிரித்விராஜ். இவ்வளவு வசதி இருக்குற இந்த காலத்துல முடியாதா என்ன? இத நான் தனியா எப்படி முடிக்கிறேன்னு பாரு.

கடைசில வந்து விக்கி எதாவது பண்ணுடா அப்படின்னு அழுது அடம் புடிச்சீங்கன்னா கூட நான் தலையிட மாட்டேன். நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம் பாஸ்.

"உன்னை" என்று கத்திக்கொண்டே அவன் மீது வீச கையில் கிடைத்த தொலைபேசியை எடுக்க, அதே நேரத்தில் சமி சரியாய் அழைத்தாள்.

பாத்தீங்களா பாஸ், அண்ணி என் சைடு தான்னு நான் அப்பவே சொன்னேன் இல்ல. எப்படி காப்பாத்திட்டாங்க பாருங்க என்று கத்திக்கொண்டே ஓடி மறைந்தான் விக்கி.

தொலைபேசியை எடுத்த பிரித்வி அவசரமாய் அவளிடம் கேட்டான் "நீ என் பக்கமா இல்ல அந்து மூளை இல்லாத ரோபோ விக்கி பக்கமா?"

அது தெரியல ஆனா எங்க அப்பா நம்ம பக்கம் இல்ல. அது உனக்கும் தெரியுமாமே பிரித்வி?

உங்க அப்பா கிட்ட பேசினியா, என்ன சொன்னாரு?

தெரியாத மாதிரி கேக்குற? நீ போய் அவர பாத்து பேசினதையும் சொன்னாரு.

ஆமா. எப்போ கல்யாணம்னு சொன்னாரா இல்ல இனிமே தான் நாள் பாக்க போறாரா?

உனக்கென்ன பைத்தியம் புடிச்சிருச்சா? நான் பதறி போய் பேசிகிட்டு இருக்கேன் நீ என்னடானா விளையாடிகிட்டு இருக்க.

உங்க அப்பாவ மீறி என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதம் தானே?

நிச்சயமா. எங்க அப்பாவ இதுக்கு முன்னாடி பாத்தது எப்போனே எனக்கு ஞாபகம் இல்ல. அந்த அளவுக்கு எனக்கும் அவருக்கும் ஒட்டுதல்.

இப்போ எல்லாருமே அப்படி தானே. எங்க வீட்ல எனக்கு கல்யாணம்னு சொன்னதுக்கு "அப்படியா, சந்தோஷம். கல்யாண தேதி என்னனு சொல்லு முடிஞ்சா வரோம்னு" சொல்லிடாங்க

கல்யாண தேதியா??? என்ன சொல்ற?

ஆமா, உங்க அப்பா தான் ஒரு நல்ல நாள் பாக்க போறாரு இல்ல உன் கல்யாணத்துக்கு, அந்த நாள் தான் நம்ம கல்யாண நாள்.

பேசறத பாத்தா ஏதோ முடிவு பண்ணிட்ட போல? என்னனு என்கிட்ட சொல்லு.

உங்க அப்பாவ மீறி என்னை கல்யாணம் பண்ண நீ சம்மதம் சொல்லிட்ட இல்ல, அது போதும். இனி கவலை படாத. கல்யாண பொண்ணுனா சந்தோசமா இருக்கனும். நீ போய் நிம்மதியா தூங்கு.எல்லாம் நான் பாத்துக்கறேன்.

எனக்கு தெரிஞ்சு முதல் முறையா நீ பொறுப்பா பேசி இருக்க. அதனால நான் நிம்மதியா தூங்க போறேன். நாளைக்கு பாக்கலாம் என்று அழைப்பை துண்டித்தாள் சமி.

பாஸ், நாளைக்கு காலையில அண்ணி வீட்டுல அவங்களுக்கு கல்யாணம். இப்போ தான் தேஜஸ் கிட்ட இருந்து தகவல் வந்தது. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாராம் அவங்க அப்பா.

விக்கி நிஜமாவா சொல்ற??? நல்ல வேலை உனக்கு ஒரு girl friend இருந்ததால நான் தப்பிச்சேன். தேங்க்ஸ் விக்கி.

என் உதவி இல்லாமலே நீங்க தனியா பாத்துக்குவேன்னு சொன்னீங்க ஆனா முடியல பாத்தீங்களா. இதுக்கு தான் சொல்றது பெரியவங்க பேச்ச கேக்கணும்னு. எப்போ தான் இதெல்லாம் உங்களுக்கு புரிய போகுதோ.

அதானே, என்னடா இன்னும் விக்கி குதர்கமா எதுவும் பேசலைனு பாத்தேன். நீ அடங்கவே மாட்ட. எனக்கு இப்போ பேச நேரம் இல்ல. உன்ன அப்பறம் கவனிச்சுக்கிறேன்.

பாஸ் இன்னொரு விஷயம், அண்ணிய மறுபடியும் 2 வருசத்துக்கு அப்பறம் தான் பாப்பாராம் அவங்க அப்பா. அவர் அவ்வளோ பிஸி.

ரொம்ப நல்லதா போச்சு.சரி நான் இப்போ கெளம்பறேன். உன்ன நாளைக்கு சமியோட பாக்கறேன்.

அடுத்த நாள் காலை, "விக்கி, உங்க பாஸ் வந்து சம்யுக்தாவ கூப்பிட்டு போயிடுவாருன்னு சொன்ன. ஆனா இங்க கல்யாணமே முடிஞ்சு போச்சுடா. என்ன ஆச்சு?" என்றாள் தேஜஸ்.

என்னது கல்யாணம் முடிஞ்சு போச்சா? நேத்து ராத்திரி அண்ணியோட வரேன்னு சொல்லிட்டு போனாரு இன்னும் வரவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நான் இப்போ அவர வேற தேடனும். உன் கிட்ட அப்பறமா பேசறேன் என்று அவன் சொல்லிகொண்டிருந்த போது வீட்டிற்க்கு வந்தான் பிரித்வி.

என்னடா விக்கி? வழக்கம் போல கடலையா? நடத்து... இனி உன் பாடு கொண்டாடம் தான் கூட்டணிக்கு ஆளு வேற கெடச்சிருச்சு. எனக்கு தான் இனி திண்டாட்டம்.

அழைப்பை துண்டித்துவிட்டு "என்ன பாஸ்? அங்க அண்ணியோட கல்யாணம் முடிஞ்சு போச்சுன்னு தேஜஸ் சொல்றா. நீங்க இங்க சந்தோசமா பேசிட்டு இருக்கீங்க?"

அப்படியா கல்யாணம் முடிஞ்சு போச்சா? சரி ஒரு பொக்கே வாங்கிட்டு வா நாம ரெண்டு பேரும் போய் குடுத்துட்டு வரலாம்.

பாஸ், சோகம் அதிகமாகி உங்களுக்கு கிறுக்கு புடிச்சு போச்சா என்ன?

எனக்கும் அப்படி தான் தோணுது விக்கி. அவனுக்கு கிறுக்கு தான் புடிச்சு இருக்கனும் இல்லாட்டி இவ்வளோ ரிஸ்க் எடுப்பானா என்றபடியே உள்ளே வந்தாள் சமி.

அண்ணி நீங்களா? உங்களுக்கு இப்போ தான் அங்க கல்யாணம் நடந்ததுன்னு தேஜஸ் சொன்னா. நீங்க இங்க இருக்கீங்க? பாஸ் இப்போ எனக்கு கிறுக்கு புடிச்சிரும் போல. என்ன நடக்குதுன்னு சொல்லுங்க பாஸ்.

என்னடா விக்கி? இது கூடவா புரியல? நீ இல்லாம என்னால ஒன்னும் பண்ண முடியாது, பெரியவங்க சொன்னா கேக்கணும்னு எல்லாம் சொன்ன. உன் சிலிகான் மூளைய கொஞ்சம் திருகி பாரு. ஏதாவது புரியுதானு.

பாஸ், சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கவே இல்ல. கொஞ்சம் புரியற மாதிரி தெளிவா சொல்லுங்களேன்?

புரியற மாதிரியா? அப்போ யாரு பெரியவங்க, யாரு புத்திசாலி சொல்லு?

நீங்க தான் பாஸ். தயவு செஞ்சு சொல்லுங்க இல்லாட்டி யோசிச்சு யோசிச்சு என் சிலிகான் மூளை கருகி போய்டும்.

அப்படி வா வழிக்கு. சொல்றேன் கேளு. இன்னைக்கு காலையில சமி வீட்டுக்கு சரியா அவ கல்யாணம் நடக்க ரெண்டு நிமிஷம் இருக்கும் போது, குதிரையில போய் நின்னேன்.

குதிரையா? அத எங்க புடிச்சீங்க பாஸ்? இன்னமும் அதெல்லாம் இருக்கா என்ன?

இப்போ எங்க அதெல்லாம் இருக்கு? ப்ரித்விராஜ் காலத்துக்கு போனப்போ அங்க இருந்து அவன் குதிரை சேடக்கோட செல் எடுத்துட்டு வந்து க்ளோன் பண்ணிட்டேன்.

கலக்கிடீங்க பாஸ். ஆனா குதிரை எதுக்கு? அத விட பல ஆயிரம் மடங்கு வேகமா இப்போ பயணிக்க முடியுமே?

அது சரி தான் ஆனா அந்த ராஜா காலத்து சூழல் வேணும் இல்ல அதுக்கு தான்.

உங்க அலும்புக்கு வர வர அளவே இல்லாம போகுது. பரவால்லை, அப்பறம் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.

அப்பறம் என்ன? சமிய குதிரைல ஏத்திகிட்டு கெளம்பி கோவிலுக்கு போய் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டேன். அவ்வளோ தான்.

ஆனா அங்க அண்ணிக்கு கல்யாணம் நடக்குதுன்னு தேஜஸ் சொன்னாளே?

ஒ அதுவா? அது உன் பாஸோட புத்திசாலி தனத்துக்கு இன்னொரு உதாரணம்.

இன்னொன்னு வேறயா? அது என்ன? தெளிவா சொல்லுங்க பாப்போம்?

ப்ரித்விராஜ் சம்யுக்தாவ கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம், அவனும் சம்யுக்தாவோட அப்பாவும் சண்ட போட்டு கடைசில ரெண்டு பேரும் வாழாமலே செத்து போனாங்க இல்ல அந்த நிலைமை எங்களுக்கு வர கூடாதுன்னு நான் பண்ண வேலை அது.

பேசறது எல்லாம் நல்லா தான் இருக்கு. என்ன பண்ணீங்கன்னு சொல்லுங்க அப்பறம் பாக்கலாம் அது புத்திசாலி தனமா இல்லையானு.

தம்பி நீ அதிகமா பேசற இருந்தாலும் சொல்றேன். ஏன்னா என் புத்திசாலி தனத்த நீ தெரிஞ்சுக்கணும் இல்ல. நேத்து உன்கிட்ட பேசிட்டு போனேன் இல்ல, எங்க போனேன் தெரியுமா? நேரா என் லேப்க்கு தான். அங்க போய் க்ளோனிங் பண்ணி சமியோட டுப்ளிகேட் ரெடி பண்ணேன்.

விக்கி, க்ளோன் பண்ண என்னோட செல் வேணும் இல்ல அது எங்க இருந்து வந்ததுன்னு உனக்கு தெரியுமா? என்னை காதலிக்க ஆரம்பிச்சப்போ என்ன பண்றோம், ஏது பண்றோம்னு புரியாம நான் கடிச்சு வீசின நகம், என் தலை முடி இப்படி எது எதோ எடுத்து வெச்சான் உங்க பாஸ். அதுல இருந்து தான் இப்போ க்ளோன் பண்ணினான்.

என்ன பாஸ்? உங்கள அறிவாளின்னு நெனச்சேன். இப்படியெல்லாம் கிறுக்கு தனமா எதோ பண்ணி இருக்கீங்க.

அந்த காலத்து சினிமால எல்லாம் காதல்னா இப்படி எதாவது பண்ணுவாங்கடா. உனக்கு இதெல்லாம் தெரியாது. ஆனா அப்படி எடுத்து வெச்சது இப்போ பயன்பட்டுச்சு இல்ல, எப்படி நம்ம தொலை நோக்கு பார்வை?

ஒ அப்போ அங்க கல்யாணம் நடந்தது க்ளோனிங் அண்ணிக்கு. சரியா?

அட உன் சிலிகான் மூளை கூட கொஞ்சம் வேலை செய்யுது போல இருக்கே. நான் காதலிச்ச பொண்ணு எனக்கு கிடைச்சாச்சு. சமியோட அப்பா ஆசைப்படியே கல்யாணமும் ஆயிடுச்சு. எப்படி?

நீங்களும் அண்ணியோட அப்பாவும் ஆசைப்பட்ட படி நடந்துருச்சு எல்லாம் ஆனா அந்த மாப்பிள்ளை பாவம் இல்ல?

பழைய சினிமால எல்லாம் இந்த மாதிரி பலி கெடாவா அமெரிக்க மாப்பிள்ளை ஒருத்தன் வருவான். அதுக்கு பதிலா இங்க அந்த கம்பெனி முதலாளி பையன். பொதுவா அந்த பலி கெடாவ பத்தி யாரும் கவலை பட மாட்டாங்க ஆனா நான் அவனுக்கும் நல்லது தான் பண்ணி இருக்கேன்.

நல்லதா? அது என்ன பாஸ்?

சமியோட க்ளோனிங் உன்ன மாதிரி பேச கத்து குடுத்து இருக்கேன் விக்கி. நீ வேணும்னா பாரு கொஞ்ச நாள்ல அவனே "போதும்டா சாமி, ஆள விடுங்க" அப்படின்னு ஓடி போய்டுவான். அப்பறமா அந்த க்ளோனிங் பார்ட்டிய உருவாக்கிய நானே முடிச்சு வெச்சிடுவேன்.

பாஸ் சொல்றதுக்கு மனசு வரல, இருந்தாலும் சொல்லி தான் ஆகணும். நானே சொல்லாட்டி வேற யாரு சொல்லுவாங்க? கலக்கிப்புட்டீங்க பாஸ். இப்போ நீங்க யார் கிட்ட வேணாலும் சொல்லிக்கலாம் நீங்க தான் என் பாஸ்னு. உங்களுக்கு முழு உரிமை தந்தாச்சு.

டேய் உனக்கு வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு வள வளன்னு பேசிட்டு இருக்காம போய் ஒரு பொக்கே வாங்கிட்டு வா, நாம போய் புதுமண தம்பதிக்கு குடுத்து வாழ்த்திட்டு வருவோம்.

இதோ ஒரே நிமிசத்துல வந்துடறேன் பாஸ்.

ஒரு நிமிசத்துல எல்லாம் வர வேண்டாம் எவ்வளவு மெதுவா முடியுமோ அவ்வளவு மெதுவா வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சமியை பார்த்தபடி சொன்னான் பிரித்வி.

புரியுது பாஸ், நடத்துங்க என்ற கிளம்பி போனான் விக்கி.

அவன் அங்கிருந்து சென்றதும் "பாத்தியா அந்த மூளை இல்லாத ரோபோ கூட ஒத்துகிட்டான் நான் புத்திசாலின்னு."

இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? மூளை இல்லாதவங்க தானே உங்கள புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க?

சே, நீயும் அவன மாதிரியே பேசற. இதுக்கா இவ்வளோ கஷ்டப்பட்டு உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன் என்று முகத்தில் பொய் சோகத்தை காட்டினான்.

அடடா நான் சும்மா சொன்னேன். உன்ன எப்படி குஷி படுத்தனும்னு எனக்கு தெரியும் என்று அவள் அவன் அருகில் வர...

இது காதல் காலமடி சகியே... இது காதல் காலமடி!!!